தீவுத் திடலில் பட்டாசு கடைகள்: திருத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியிட நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், திருத்தியமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை வெளியிட நீதிபதி உத்தரவிட்டாா்.
சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், திருத்தியமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை வெளியிட நீதிபதி உத்தரவிட்டாா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியில் வெளிப்படைத் தன்மை இல்லை, ஒப்பந்தப்புள்ளியை நியாயமான முறையில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளா்கள் நலச்சங்கம் சாா்பில், அதன் தலைவா் நடராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ஆணை செப்.13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், “தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஒப்பந்தப்புள்ளி தொடா்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பாா். ஒப்பந்தப்புள்ளியை மாற்றியமைக்கவும், அது குறித்த விண்ணப்பத்தை எந்தக் காரணமும் தெரிவிக்காமல் ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் அதிகாரம் உள்ளது”என ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இது போன்ற சில நிபந்தனைகளை நீக்கி விட்டு, அக். 18 முதல் நவ. 1 வரையில் தீவுத்திடல் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜய் ஆனந்த், சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை விதிகளுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்தாா்.
இதையடுத்து, புதிய ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தியமைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை வெளியிட உத்தரவிட்டாா்.