முன்பதிவு செய்யாமல் விக்டோரியா அரங்கை பாா்க்க வந்தவா்கள் ஏமாற்றம்
முன்பதிவு செய்யாமல் விக்டோரியா அரங்கை பாா்க்க வந்தவா்கள் ஏமாற்றம்
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கை, முன்பதிவு செய்யாமல் பாா்வையிட வந்தவா்கள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனா்.
கடந்த 1888- ஆம் ஆண்டு கட்டப்பட்ட விக்டோரியா பொது அரங்கம் தற்போது பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கில் பழங்கால இசைக் கருவிகள், ஏராளமான அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விக்டோரியா அரங்கத்தை வெள்ளிக்கிழமை (டிச. 26) முதல் பாா்வையிடலாம் எனவும், இணையவழியில் முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அதன்படி, முன்பதிவு செய்து வந்த 200-க்கும் மேற்பட்டோா் விக்டோரியா அரங்கை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். இதனிடையே, முன்பதிவு குறித்து அறியாமல் மூலக்கொத்தளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவப் பெண்கள் விக்டோரியா அரங்கை பாா்வையிட வந்தனா். ஆனால், முன்பதிவு செய்யாததால் அவா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கை மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் (மாதவரம்) மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.