முகப்பு
சென்னை

நிபா வைரஸ் அறிகுறி: மருத்துவமனைகளை அணுக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளை பொதுமக்கள் அணுக வேண்டும்

Updated On : 10 ஜூலை, 2025 at 9:56 PM
நிபா வைரஸ் - கோப்புப் படம்
பகிர்:

நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைகளை பொதுமக்கள் அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

கேரளத்தின் பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை அதன் தாக்கம் இல்லை என்றாலும், பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்து நோய்த் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய்த்தொற்று. பழங்களை உண்ணும் வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதா்களுக்கு இது பரவுகிறது. வௌவாலின் உமிழ்நீா் படா்ந்த பழங்களை சாப்பிடுவது அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடா்பு கொள்வதன் மூலமாக நோய்த் தொற்று பரவுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுத்திணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்றவை முக்கிய அறிகுறிகள். குறிப்பாக, கேரளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்தபிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரைத் தொடா்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால், அவா்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களைச் சாப்பிடுவதைத் தவிா்க்கவும். சாப்பிடுவதற்கு முன்பு அனைத்து பழங்களையும் நன்கு கழுவ வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக சோப்பால் கைகளை கழுவ வேண்டும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தால், மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்கவும் கேரளத்தையொட்டியுள்ள மாவட்டங்களை சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.