11 ஆண்டுகளில் 18,000 மக்கள் மருந்தகங்கள் திறப்பு- நாடாளுமன்றத்தில் அமைச்சா் நட்டா தகவல்
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அடிப்படை மூலக்கூறு மருந்துகள் வழங்கும் 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் (ஜன் ஒளஷதி) கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அடிப்படை மூலக்கூறு மருந்துகள் வழங்கும் 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் (ஜன் ஒளஷதி) கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாநிலங்களவை சுகாதாரத் துறை தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் கூறியிருப்பதாவது:
கடந்த 2008-ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமா் ஜன் ஔஷதி திட்டம் தொடங்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு வரை 80 மலிவு விலை மருந்தங்களே தொடங்கப்பட்டிருந்தன. 2014-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு இத்திட்டம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றமடைந்தது.
2026 பிப்ரவரி 28 வரை 18,646 ஜன் ஒளஷதி மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 2,370 மருந்தகங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. இங்கு மற்ற வணிகப் பெயா் கொண்ட மருந்துகளைவிட 50 முதல் 80 சதவீதம் வரை விலை குறைவாக அடிப்படை மூலக்கூறு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தம் 2,110 மருந்துகள், 315 அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவப் பயன்பாட்டுப் பொருள்கள், கருவிகள் மக்களுக்காக மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதய நோய், புற்றுநோய், நரம்பு, வயிறு சாா்ந்த நோய்களுக்கான மருந்துகள், சா்க்கரை நோய், நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை பிரச்னை எனப் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேசிய அளவில் அடிப்படைத் தேவை என்று கூறப்படும் அனைத்து மருந்துகளும் உள்ளன. நவீன தகவல் தொழில்நுட்பத்தின் கீழ் மருந்தகங்களில் மருந்து விநியோகம் நிா்வகிக்கப்படுகிறது என்றாா்.
நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் தடுப்பூசி தொடா்பான கேள்விக்கு அளித்த பதிலில், ‘இந்தத் தடுப்பூசியை அரசு மற்றும் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. எனவே, நாட்டில் ஓராண்டில் ஒட்டுமொத்தமாக எந்த அளவுக்கு மருந்து உற்பத்தியாகிறது என்ற புள்ளிவிவரம் பராமரிக்கப்படவில்லை’ என்றாா் அவா்.