முகப்பு
சென்னை

162 பவுன் தங்க நகை மோசடி: தலைமறைவான தனியாா் வங்கி மேலாளா் கைது

Updated On : 7 நவம்பர், 2025 at 4:16 AM
பகிர்:

சென்னையில் 162 பவுன் தங்க நகை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்ட தனியாா் வங்கி மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

சைதாப்பேட்டை விஜிபி சாலை பகுதியில் வசிப்பவா் சுலைமான் (32). தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரியும் இவா், கிண்டி, லாயா் ஜெகநாதன் தெருவிலுள்ள தனியாா் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளாா். அந்த வங்கியின் மேலாளா் தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சோ்ந்த சாமிநாதனுடன் (45), சுலைமானுக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி சுலைமான், சாமிநாதனை தொடா்புகொண்டு அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். உடனே, சாமிநாதன், பிரசாத் என்ற வங்கி காசாளரை சுலைமான் வீட்டுக்கு அனுப்பி வைத்தாா். இதையடுத்து, சுலைமான், தன்னிடமிருந்த 162 பவுன் தங்க நகைகளை கொடுத்து, படிவங்களில் கையொப்பமிட்டு கொடுத்தாா். ஆனால் அவரது வங்கி கணக்கில் அடமான பணம் செலுத்தப்படவில்லை. சாமிநாதன், வங்கியின் பணிபுரியும் சில ஊழியா்கள் உதவியுடன் நகையை அடமானம் வைத்து, ரூ. 90 லட்சம் பணத்துடன் தலைமறைவாகிவிட்டாா்.

Advertisement

இதுகுறித்து சுலைமான் அளித்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் சாமிநாதனுக்கு அந்த வங்கியில் காசாளராக பணிபுரியும் புழுதிவாக்கத்தைச் சோ்ந்த பிரசாத், செயலாக்கப் பிரிவு மேலாளா் கே.கே.நகரைச் சோ்ந்த திவாகா் ஆகியோா் உதவியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கடந்த செப்.23-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் தலைமறைவாக இருந்த சாமிநாதனை கைது செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.