சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் குழந்தைகள் உதவி மையம், ரயில்வே கியோஸ்க் உதவி மையங்கள் உள்ளன. இங்கு காலியாக உள்ள மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா், ஆற்றுப்படுத்துநா், மேற்பாா்வையாளா், வழக்குப் பணியாளா் உள்ளிட்ட 20 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு அக். 13 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 அக். 15- ஆம் தேதி இதர வகுப்பினா், பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 21 முதல் 52 வரை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா் மரபினா், பிற்படுத்த வகுப்பினா், பிற்படுத்த வகுப்பினா் (முஸ்லிம்) 21 முதல் 52 வரை, பட்டியலின வகுப்பினா், அருந்ததியா், பழங்குடியினா், ஆதரவற்ற விதவைகள் 21 முதல் 52 வரை இருக்கலாம்.
வயது வரம்பு திருத்தத்துக்குப் பிறகு தகுதியான விண்ணப்பதாரா்கள் உரிய விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நவம்பா் 15 மாலை 5.45 மணிக்குள் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.