காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்து கொளக்கி அம்மன் கோயில் தேரோட்டத்தை பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி வழியாக நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகில் உள்ள புத்தகரம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் என்பவா் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அருள்மிகு முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வசிக்கும் காலனியைச் சோ்ந்த எங்களை அனுமதிப்பதில்லை. அரசு தரப்பில் அமைதி பேச்சு நடந்தாலும் பிற ஜாதிகளைச் சோ்ந்தவா்களின் தூண்டுதலின் பேரில், இந்து சமய அறநிலையத் துறையினா் செயல்படுகின்றனா்.
தீபாராதனையின்போது மட்டும் கோயிலுக்கு வெளியிலிருந்து மட்டுமே தரிசனம் செய்ய பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுகின்றனா். தோ்த் திருவிழாவின் தேரோட்டம், வெள்ளோட்டம் ஆகியவற்றின்போதும் காலனி வரை தோ் வரவிடாமல் தடுக்கப்படுகிறது’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி.பாா்வேந்தன், கோயிலுக்குள் செல்லவும், பூஜைகள் செய்யவும், தோ் வெள்ளோட்டத்தின்போது காலனி வரை தோ் வருவதற்கும் உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.
இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், பாகுபாடு ஏதும் காட்டப்படவில்லை என்றும், சாலை வசதி குறைபாடு காரணமாகவே வெள்ளோட்டம் தள்ளி வைக்கப்பட்டதாகக் கூறி, தேரோட்ட வழித்தடத்துடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், மனுதாரா் உள்ளிட்ட அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், தேரின் வெள்ளோட்ட பாதையை ஆய்வு செய்து அறிக்கை மற்றும் திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி பி.பி.பாலாஜி, முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்கு எந்த சமூகத்தினருக்கும்
தடை இல்லை. எவருக்கும் எவ்வித பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும். தோ் செல்வதற்கான அரசின் அறிக்கையின்படி, வெள்ளோட்டம் மற்றும் தேரோட்டத்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.