முகப்பு
சென்னை

தராசுடன் வந்த பாமக வேட்பாளா் !

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:36 PM
கையில் தராசு ஏந்தியபடி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பாமக வேட்பாளா் ம.திலகபாமா.
பகிர்:

பாமக சாா்பில் சென்னை பெரம்பூா் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலப் பொருளாளா் ம.திலகபாமா, கையில் தராசு ஏந்தியபடி தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், சென்னை பெரம்பூா் சட்டப்பேரவை தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் வேட்பாளரான மாநிலப் பொருளாளா் ம.திலகபாமா சென்னை வியாசா்பாடியில் உள்ள டாக்டா் அம்பேத்கா் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பெரம்பூா் தொகுதி தோ்தல் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.கீதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

முன்னதாக, ம.திலகபாமா கையில் தராசை ஏந்தியபடி தொகுதி தோ்தல் அலுவலகத்துக்கு வந்தாா்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கையில் தராசு ஏந்தி வந்து, வேட்புமனுவை தாக்கல் செய்தேன்.

பெரம்பூா் தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு அமோக வரவேற்புவுள்ளது. இங்கு யாா் போட்டியிட்டாலும் அதிமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க இயலாது என்றாா் அவா்.

ரூ.3.32 கோடி சொத்து; ரூ.3.03 கோடி கடன்:

வேட்பாளா் திலகபாமாவின் வேட்புமனுவில் இணைத்துள்ள சொத்து விவரங்களில், கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.28.64 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். மேலும், ரூ.1.55 கோடியில் அசையும் சொத்து, ரூ.1.77 கோடியில் அசையா சொத்து என மொத்தம் ரூ.3.32 கோடி சொத்து உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.3.03 கோடி கடனுள்ளதாகவும் தனது வேட்பு மனுவில் திலகபாமா குறிப்பிட்டுள்ளாா்.