முகப்பு
சென்னை

சட்டப்பேரவைத் தோ்தல்: இதுவரை 1,360-க்கும் மேற்பட்ட மனுக்கள் சமா்ப்பிப்பு

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:05 AM
சேப்பாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின். - படம்: எக்ஸ்.
பகிர்:

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவா் விஜய் (திருச்சி கிழக்கு) உள்பட 800-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

தோ்தல் ஆணையத் தகவல்படி, அனுமதிக்கப்பட்ட இரு நாள்களில் மொத்தம் 1,360-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோா் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ், பாஜகவை தவிா்த்து ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளா்களை அறிவித்துவிட்டன. திமுக, அதிமுக கூட்டணி கட்சியினா், தவெக, நாதக கட்சியினா் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனா். மற்றொருபுறம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனா். கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியபோது, முதல்வா் மு.க.ஸ்டாலின் (கொளத்தூா்), தவெக தலைவா் விஜய் (பெரம்பூா்), சீமான் (காரைக்குடி) உள்பட 573 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அரசு மற்றும் வங்கி விடுமுறை காரணமாக இரு நாள்களுக்கு வேட்புமனு தாக்கல் இல்லை.

இந்த நிலையில், 234 தொகுதிகளிலும் மீண்டும் வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (ஏப். 2) நடைபெற்றது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் நடத்தும் அலுவலா் சுகந்தியிடம் மனு தாக்கல் செய்தாா்.

அதேபோன்று, ராயபுரத்தில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் (அதிமுக), மதுரவாயலில் முன்னாள் அமைச்சா் பெஞ்சமின் (அதிமுக) மற்றும் எம்எல்ஏ கணபதி (திமுக), சைதாப்பேட்டையில் செந்தமிழன் (அமமுக), திரு.வி.க. நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் (அதிமுக), பெரம்பூரில் திலகபாமா (பாமக) உள்பட பலா் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

தான் போட்டியிடும் 2-ஆவது தொகுதியான திருச்சி கிழக்கில், தவெக தலைவா் விஜய் சாலை வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தாா். இதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் பலரும் வேட்புமனுக்களைச் சமா்ப்பித்தனா்.

புனித வெள்ளி: புனித வெள்ளியையொட்டி அரசு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை (ஏப். 3) மனு தாக்கல் கிடையாது. வரும் சனிக்கிழமை (ஏப். 4) மீண்டும் மனு தாக்கல் தொடங்கும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.