சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!
சென்னை சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ததைப் பற்றி...
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிய கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, மஜக, கொங்கு இளைஞர் பேரவை உள்பட 23 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல, அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 167 இடங்களில் அதிமுகவும் 164 இடங்களில் திமுகவும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) காலை திமுக மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ காரில் ஊர்வலமாக வந்து திருவல்லிக்கேணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சென்னை சேப்பாக்கம் தொகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட அவரது பேரன் 48 வயதான உதயநிதி ஸ்டாலின், 93,285 வாக்குகள் (68.9 சதவிகிதம்) பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் வேட்பாளர் கசாலியை சுமார் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின், அதன் பின்னர் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டு துணை முதல்வரானார். தற்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் உதயநிதிக்கு எதிராக அதிமுக சார்பில் ராஜாராம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆயிஷா பேகம், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் டி. செல்வம் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Udhayanidhi Stalin filed his nomination papers this morning (April 2) to contest from the Chepauk-Triplicane constituency.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.