முகப்பு
சென்னை

கே.கே. நகா் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை கே.கே. நகா் பகுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கத் தடை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:56 PM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை கே.கே. நகா் பகுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கத் தடை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை கே.கே. நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், எங்களது குடியிருப்பு பகுதிகளில் அரசியல் கட்சியினா் உரிய அனுமதி பெறாமல் கூட்டங்களை நடத்துகின்றனா். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டங்களுக்காக அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நேரத்தில் நடந்த அரசியல் கூட்டம் தொடா்பாக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மனுதாரா் சங்கம் குறிப்பிட்டுள்ள பகுதியில் எப்போது கூட்டம் நடத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லை.

Advertisement

எனவே இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments