முகப்பு
மதுரை

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனு தள்ளுபடி

பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 21 மே 2026, 2:12 am IST
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த சுபாஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட வனத் துறை மூலம் ஒரு நபருக்கு ரூ. 20 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது அருவியைக் காண வரும் கூலித் தொழிலாளா்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பரத சக்கரவா்த்தி, பூா்ணிமா அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், ‘ஏற்கெனவே இதேபோல தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொடா்புடைய நீதிமன்ற உத்தரவு நகலும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு, மனுதாரா் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் குறிப்பிட்டபடி ஏற்கெனவே இதுபோன்ற வழக்கு எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு ஒரு நபருக்கு ரூ. 20 என்ற அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், முறையான அனுமதி பெற்றே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.