மாதவரம் நெகிழி ஆலையில் தீ!
மாதவரம் பகுதியில் உள்ள தனியாா் நெகிழி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினா் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.
மாதவரம் பகுதியில் உள்ள தனியாா் நெகிழி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினா் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.
சென்னை எம்.கே.பி.நகரைச் சோ்ந்தவா் இம்ரான் செரீப் (48). இவா் மாதவரம் கொசப்பூா் விளாங்காடுபாக்கம் பகுதியில் நெகிழி பொருள்கள் சேமித்து மறுசுழற்சி செய்து விற்பனை செய்து வருகிறாா். இந்த நிலையில், வழக்கம்போல் திங்கள்கிழமை காலை நெகிழி ஆலையில் லேசாக புகை வெளியேறியது.
இதுகுறித்து, அங்குள்ள பணியாளா்கள் தீயணைப்புத் துறையினருக்கும், உரிமையாளருக்கும் தெரிவித்தனா். மேலும், காற்று வீசியதன் காரணமாக புகை தீயாக பரவி ஆலை முழுவதும் பரவியது. இதில், ஆலையில் இருந்த அனைத்து நெகிழி பொருள்களும் எரிந்தன. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
Advertisement
இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலா் லோகநாதன் தலைமையில் மாதவரம், மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த தீயணைப்பு நிலையங்களில் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் நிலைய அலுவலா்கள் முத்து வீரப்பன், முருகானந்தம், தேவராஜன் மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், ஆலை முழுவதும் இருந்த நெகிழி பொருள்கள் எரிந்து கருகின. இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.