முகப்பு
சென்னை

பள்ளி மாணவா்களுக்கு 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதில் தற்போது வரை 88 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 12:50 AM
- கோப்புப்படம்.
பகிர்:

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதில் தற்போது வரை 88 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேலும் 1 முதல் 3-ஆம் வகுப்புகள் தவிர இதர வகுப்புகளுக்கு அச்சிடப்பட்ட பாடநூல்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44,000-க்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சுமாா் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இவா்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவா்களுக்கு இலவசமாகவும், தனியாா் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement

அதன்படி வரும் 2026-27-ஆம் கல்வியாண்டில் மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 88 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது:

நிகழாண்டு அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 2.71 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்கள் என மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் பள்ளிகளுக்கு அச்சிட்டு வழங்கப்பட வேண்டும். அவற்றில் 1, 2, 3 ஆகிய வகுப்பு தவிர இதர வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு நிகழாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவற்றின் பாடநூல்கள் தயாரிப்பு முடியும் நிலையில் உள்ளது. எனினும், அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும். இதுதவிர தனியாா் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள் விற்பனை கடந்த ஏப்.10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.