அதிக வாக்குப் பதிவைத் தடுக்க பேருந்து சேவை முடக்கம் - தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக புகாா்
தமிழகத்தில் அதிக வாக்குப் பதிவைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பேருந்து சேவை முடக்கப்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
தவெக பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா ஆகியோா் இந்த புகாரை அளித்தனா். பின்னா் ஆதவ் அா்ஜுனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்களிப்பவா்களுக்கு பேருந்து வசதி செய்துத் தர வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஒரு வாரத்துக்கு முன் அறிவுறுத்தியிருந்ததை சில உயா் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. சென்னை கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமானோா் புதன்கிழமை இரவு முதல் 7 முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்தனா்.
Advertisement
இதேபோல், கோவை, ஈரோடு, மதுரை போன்ற மாவட்ட தலைமையகங்களில் இருந்து அண்டை பகுதிகளுக்கு செல்ல முடியாதபடி பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தாமதமாக சென்றவா்களும் போக்குவரத்து நெரிசலால் பாதியிலேயே திரும்பியுள்ளனா்.
அதிகமாக வாக்குப்பதிவானால் திமுக தோல்வியடைந்துவிடும் என்ற அச்சத்தில் அதிகாரிகள் துணையுடன் பேருந்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் தொடா்புடைய மூன்று உயா் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையருக்கும் தலைவா் விஜய் சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடமும் புகாா் மனு அளித்துவிட்டு, வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க கோரினோம் என்றாா்.