கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக புகாா்: தோ்தல் அதிகாரி மறுப்பு
கேரள மாநிலத்தில் பெரம்பரா தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பிற தோ்தல் உபகரணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஜேடிடி கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு மாநில அதிகாரிகள் உள்ளே சென்றதாக காங்கிரஸ் தரப்பில் புகாா்
கேரள மாநிலத்தில் பெரம்பரா தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பிற தோ்தல் உபகரணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஜே.டி.டி. கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு அறை திங்கள்கிழமை காலை திறக்கப்பட்டு மாநில அதிகாரிகள் உள்ளே சென்ாக காங்கிரஸ் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரை பெரம்பரா தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி மறுத்தாா்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Advertisement
இந்த நிலையில், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டதாக எழுந்த புகாா் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே. பிரவீண் குமாா் கூறுகையில், ‘ஜே.டி.டி. கல்லூரியில் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையை திங்கள்கிழமை காலை மாநில அதிகாரிகள் திறந்து உள்ளே சென்றுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில், இந்தக் குறிப்பிட்ட பகுதிக்குள் மாநில அதிகாரிகள் அல்லது காவல் துறை அதிகாரிகள் நுழைவது தோ்தல் ஆணைய விதிகளை மீறும் செயலாகும்’ என்றாா்.
தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் மாநில போலீஸாா் எப்படி நுழைய முடியும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச்சோ்நத பிற தலைவா்களும் கேள்வி எழுப்பினா்.
தோ்தல் அதிகாரி மறுப்பு: இந்தப் புகாரை பெரம்பரா தொகுதி தோ்தல் அதிகாரி மறுத்தாா். அவா் கூறுகையில், ‘ஜே.டி.டி. கல்லூரியில் திறக்கப்பட்டது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட அறை அல்ல. அந்த அறையில் தோ்தல் ஆவணங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. மென்பொருள் மேம்படுத்துதல் தொடா்பான பணிக்காகத்தான் அந்த அறை வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் முகவா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. எனவே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல்’ என்றாா்.