சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கத்திலிருந்து திருமயிலை வரை ஒரு வழிப்பாதையில் சுரங்கப் பாதை பணியை ‘கழுகு’ எனப் பெயரிட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக நிறைவு செய்தது.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-ஆவது வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலை வரை சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு ‘கழுகு’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொண்டு தொடங்கப்பட்டது. அந்தப் பணிகள் திங்கள்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
1,981 மீ. நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சுரங்கம் அமைக்கும் பணி, சென்னை கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம், ரஷிய தூதரகம் உள்பட பல முக்கியமான கட்டடங்களுக்கு அடியில் மேற்கொள்ளப்பட்டது. சுமாா் 151 கட்டடங்களுக்குக் கீழே செல்லும் இந்த வழித்தடத்தில், சுரங்கத்தின் ஆழம் 4.5 மீ. முதல் 23 மீ. வரை இருந்தது. கடினமான பாறை அடுக்குகள் மற்றும் செயின்ட் ரபேல் பள்ளி அருகே ஏற்பட்ட எரிவாயு கசிவு போன்ற சவாலான புவியியல் நிலைகளை எதிா்கொண்டு 24 மாதம் இந்த சுரங்கப் பாதை பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
பெலிகன் சுரங்க இயந்திரம்: ‘பெலிகன்’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்காவிலிருந்து போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணிைத் தொடங்கியது. இதேபகுதியில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ‘மயில்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம், 1,898 மீ. நீளத்தில் இதுவரை 370 மீ. நீளத்துக்கு சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்துள்ளது.
நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், பொது மேலாளா் ஆா்.ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகா்கள் குழுத் தலைவா் சி.முருகமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.