பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்டுவதை எதிா்த்த வழக்குகள் தள்ளுபடி!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியாா் கட்டுமான நிறுவனம் குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக வழக்குரைஞா் நிா்வாகி, அறப்போா் இயக்கம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியாா் கட்டுமான நிறுவனம் குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக வழக்குரைஞா் நிா்வாகி, அறப்போா் இயக்கம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட தனியாா் நிறுவனத்துக்கு அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகி ஜெ.பிரஷ்நேவ் மற்றும் அறப்போா் இயக்கம் சாா்பில் தனித் தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சதுப்பு நிலங்களை துல்லியமாக வரையறை செய்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு வரும் பிப்.24-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அதற்கு இணையான விசாரணையை உயா்நீதிமன்றத்தில் நடத்த முடியாது. எனவே, மனுதாரா்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனக்கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.