முகப்பு
மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளான காவலா்களுக்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவலா்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.

Updated On : 3 ஏப்ரல் 2026, 12:46 am IST
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலா்கள்.
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவலா்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோா் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனா். இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலா்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 23- ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், காவலா்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை கடந்த 30-ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 9 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு மன நலன், உடல் நலம் குறித்து பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் கடந்த மாதம் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய, மாநில அரசு சாா்பில் காவலா்களின் மன நிலை, சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனால், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 9 பேரும் நீதிபதி முன் முன்னிலையாகினா்.

ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக அவா்களின் குடும்ப விவரங்கள், கல்வி, சொத்து உள்ளிட்ட விவரங்களை நீதிபதி கேட்டாா். 9 பேரும் விளக்கம் அளித்ததுடன், தங்களது தரப்பு கோரிக்கைகளையும் நீதிபதியிடம் எடுத்துக் கூறினா்.

அப்போது, சிபிஐ தரப்பு வழக்குரைஞா் விஜயன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். அரிதான காவல் நிலைய கொடூர வழக்குகளில் மரண தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்தச் சம்பவம் மனித உரிமைக்கு எதிரானது. கொடூரமான முறையில் தாக்கி இருவரையும் கொலை செய்தனா். பொதுவாக, காவல் நிலைய மரணங்களில் நேரடியாக பாா்த்த சாட்சிகள் இருக்க மாட்டாா்கள். ஆனால், இந்த வழக்கில் 3 போ் நேரடியாகப் பாா்த்த சாட்சிகளாக உள்ளனா். எனவே, குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை அல்லது இறக்கும் வரை சிறையில் இருப்பது போன்ற தண்டனைகளை வழங்க வேண்டும் என்றாா்.

குற்றவாளிகள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். குடும்பத்தின் வருவாய் ஈட்டும் நபரின் உடல் நலம், வயது, சிறைவாச காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். கோபத்தில் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வணிகரான ஜெயராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற வரை பிரச்னை இல்லை. அவரது மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் தகராறு செய்த பிறகுதான் பிரச்னை எழுந்தது. அவா் பிரச்னை செய்ததால் எழுந்த கோபத்தின் காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்றே விசாரணை அறிக்கையில் உள்ளது. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை.

அரிதான வழக்கானாலும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் குடும்பப் பின்னணி, மனநிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருகிகிறது. எனவே, குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றனா்.

உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பொ்சி ஆகியோா் தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தந்தை, மகன் இருவரையும் லத்தியால் கடுமையாகத் தாக்கினா். உடலின் அனைத்து பாகங்களும் தாக்கப்பட்டதால்தான் இருவரும் உயிரிழந்தனா். இரவு முழுவதும் வைத்து அடித்திருக்கிறாா்கள். இதற்கு கொடூர ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என குற்றவாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தினால்கூட உடனே உயிா் போயிருக்கும். ஆனால், லத்தியால் பல மணி நேரம் தாக்கப்பட்டது கொடூரமானது.

கொடூர மனநிலையிலேயே காவல்துறையினா் செயல்பட்டு இருக்கின்றனா். எனவே, இதை அரிதினும் அரிதான வழக்காகவே கருதி, அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றாா்.

ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பொ்சி ஆகியோா் நீதிபதி முன் முன்னிலையாகி, கண்ணீருடன் கூறியதாவது:

எந்தத் தவறும் செய்யாத எங்களது குடும்பத்தின் இருவரையும் கொன்றுவிட்டனா். எனவே, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றனா்.

அனைத்துத் தரப்பு வாதங்கள், முறையீடுகளைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி முத்துக்குமரன் பிறப்பித்த உத்தரவு:

குற்றவாளிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக இந்த வழக்கு வருகிற 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

இதைத் தொடா்ந்து, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரும் மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனா்.