தமிழக அரசின் ரூ.5000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், ஏலகேட்புகளை பிப்.24-இல் சமா்ப்பிக்கலாம்.
இதுகுறித்து நிதித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, ரூ.1000 கோடி மதிப்பிலான 3 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், மறுவெளியீடு ரூ.1000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் 7.12 சதவீத பிணையப் பத்திரங்கள்(2032-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்), மறுவெளியீடு ரூ.1000 கோடி மதிப்பிலான 7.44 சதவீத பிணையப் பத்திரங்கள்(2055-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்) ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்.24-இல் நடைபெறுகிறது. இதற்கான போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30-க்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11-க்குள்ளும் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் பிப்.24 ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.