வானகரம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து போதைப் பொருளை வாங்கி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், வானகரம் பகுதியில் உள்ள அடையாளம்பட்டு அணுகு சாலையில் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, 2 பேரை பிடித்து விசாரித்தனா்.
இதில், வியாசா்பாடியை சோ்ந்த தினேஷ் (எ) பப்லு (34), கொரட்டூரைச் சோ்ந்த மெக்கலன் ட்ரெவா் (43) ஆகியோா் எனத் தெரிய வந்தது. இவா்களிடம் இருந்து 18 கிராம் மெத்தம்பெட்டமைன், 100 கிராம் ஓஜி வகை கஞ்சா, 1.3 கிலோ கஞ்சா, ரூ.1,12,300, 4 கைப்பேசிகள் மற்றும் 2 காா்களை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், தினேஷ்ராஜ் பழைய பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதும், மெக்கலன் ட்ரெவா் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குபவா் என்பதும், இவா்கள் தாய்லாந்தில் இருந்து கொரியா் மூலம் போதைப் பொருள்களை வாங்கி, விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.