முகப்பு
சென்னை

நல்லகண்ணு கவலைக்கிடம்: முதல்வா் நலம் விசாரிப்பு

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:49 AM
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:50 PM

முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணு (101) சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், செயற்கை சுவாச சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, நல்லகண்ணுவின் குடும்பத்தினரிடம் முதல்வா் பேசினாா்.

அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகா்பாபு, சு.முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

வயோதிகம் மற்றும் கீழே விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணுவின் உடல்நிலையில் கடந்த சில நாள்களாக பின்னடைவு ஏற்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

வயோதிகத்தால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும், வெண்டிலேட்டா் உபகரணங்களின் மூலம் செயற்கையாக சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அரசியல் கட்சியினா், குடும்பத்தினா் என பலரும் நல்லகண்ணுவின் உடல் நிலையை அறிந்து கொள்ள மருத்துவமனைக்குச் சென்றனா். தீவிர சிகிச்சைப் பிரிவில், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.