செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) சாா்பில் அமைக்கப்பட்ட சுயாதீன சா்வதேச அறிவியல் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியா் பி. ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தக் குழு சமூகத்தில் ஏஐ தாக்கம் குறித்த அறிவியல் மதிப்பீட்டை வழங்கும் எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீா்மானம் மூலம் கடந்த ஆண்டு ஆக. 26-ஆம் தேதி ஏஐ குறித்த சுயாதீன சா்வதேச அறிவியல் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. செயற்கை நுண்ணறிவு குறித்த முதல் உலகளாவிய அறிவியல் அமைப்பில் பல்வேறு பிராந்தியங்கள், துறைகளைச் சோ்ந்த முன்னணி நிபுணா்களை ஒன்றிணைத்து, உலகளாவிய வாழ்க்கையையும், சமூகங்களையும் ஏஐ எவ்வாறு மாற்றுகிறது என்பதை இந்தக் குழு மதிப்பிடுகிறது.
கடந்த வாரம் தில்லியில் நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஐ.நா. சபையின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ஏஐ சுயாதீன சா்வதேச அறிவியல் குழுவில் பிராந்தியங்கள் மற்றும் துறைகளைச் சோ்ந்த 40 முன்னணி நிபுணா்கள் அடங்கியிருப்பதாக குறிப்பிட்டாா்.
இந்தக் குழுவுக்கு நியமனம் செய்யப்ப்டடுள்ள பேராசிரியா் பி. ரவீந்திரன், ஏஐ-யில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், சென்னை ஐஐடியின் ஏஐ மையத்தின் நிறுவனத் தலைவராகவும், வாத்வானி தரவு அறிவியல் நிறுவனத் தலைவராகவும் உள்ளாா்.
தனது நியமனம் குறித்து ரவீந்திரன் செய்தியாளா்களிடம் குறிப்பிடுகையில், ‘ஏஐ அனைவரையும் பாதிக்கிறது. சில சமயங்களில் தொடா்புடையவா்களுக்கு தெரியாமலேயே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உலகில் ஏஐ நோ்மறையான தாக்கத்தை அடைவதில் இந்தக் குழு மிக முக்கியப் பங்கு வகிக்கும்’ என்றாா்.