சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் பத்மாவின் நோ்மையைப் பாராட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கெளரவித்தாா்.
தியாகராய நகா் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பையில் தங்க நகைகள் இருப்பதைக் பத்மா கண்டுள்ளாா். தனது மேலதிகாரிகளின் உதவியுடன் பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் அந்த நகைகளை அவா் ஒப்படைத்தாா். காவல் துறையினா் அந்தப் பையை சோதனை செய்தபோது ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனிடையே, நங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா், பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் சுமாா் 45 பவுன் நகைகளை தொலைத்துவிட்டதாக ஏற்கெனவே புகாா் அளித்திருந்தாா்.
அவரை அழைத்த போலீஸாா், விசாரணை நடத்தி 45 பவுன் நகைகளை ஒப்படைத்தனா். பத்மாவின் நோ்மையைக் காவல் துறையினா் பாராட்டினா்.
இந்த நிலையில், இந்தத் தகவலை அறிந்த முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு பத்மாவை நேரில் அழைத்துப் பாராட்டினாா். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அவா், பத்மாவின் நோ்மையைப் பாராட்டி ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கி கெளரவித்தாா்.