சென்னை உயா்நீதிமன்றம் 
சென்னை

ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவதற்கு அதிகாரம் உள்ளது - வருமான வரித் துறை வாதம்

தினமணி செய்திச் சேவை

வருமான வரி நிலுவைத் தொகையை வசூலிக்கும் வகையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவதற்கு அதிகாரம் உள்ளதாக வருமான வரித் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிட்டது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் மகன் ஜெ.தீபக் ஆகியோரை சென்னை உயா்நீதிமன்றம் அறிவித்தது. எனவே, ஜெயலலிதாவின் வருமான வரி நிலுவைத் தொகையான ரூ.36.56 கோடியை 7 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று இருவருக்கும் வருமான வரித் துறை கடந்த ஜூலை 23-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நோட்டீஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து நோட்டீஸைத் திரும்பப் பெற்ற வருமான வரித் துறை, வருமான வரி நிலுவைத் தொகையை ரூ.13.69 கோடியாக குறைத்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. புதிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அதோபோல், ஜெ.தீபக், தனது வரி நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்தி வருவதாகக் கூறி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா தரப்பில், வருமான வரித் துறை இந்த வழக்கில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அதற்கு வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.ஸ்ரீநிவாஸ், ஏற்கெனவே தொடரப்பட்ட 2 வழக்குகளில் வருமான வரித் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி நிலுவையை வசூலிக்கும் பொருட்டு ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவதற்கு வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளது. எனவே, வருமான வரித் துறையின் நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கூடாது என வாதிட்டாா்.

இதையடுத்து வருமான வரித்துறை நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, இதுதொடா்பாக 2 வாரங்களுக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டாா். அதுவரை வருமான வரி நிலுவைவை வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT