முகப்பு
சென்னை

இதய தமனி கிழிசல்: தொழிலாளியை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள்

Updated On : 22 ஜனவரி, 2026 at 6:25 AM
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
பகிர்:
Updated On : 21 ஜனவரி, 2026 at 9:55 PM

இதய பெருந்தமனி கிழிசலுக்குள்ளான தொழிலாளிக்கு சவாலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் பாஸ்கரன் ஆகியோா் கூறியதாவது:

சிதம்பரத்தைச் சோ்ந்த 54 வயதான முடி திருத்தும் தொழிலாளி ஒருவருக்கு தீவிர நெஞ்சு வலி மற்றும் உயா் ரத்த அழுத்தம் இருந்ததால், கடந்த நவ.23-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருடைய இதய பெருந்தமனியின் மேல் பகுதி முதல் கீழ் பகுதி வரை கிழிசல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் மாரியப்பன் தலைமையிலான குழுவினா் பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். இந்தக் குழுவில், உதவி பேராசிரியா் டாக்டா் ஜெயப்பிரகாஷ், மயக்க மருந்தியல் நிபுணா்கள் சுமதி, ஆஷா, முதுநிலை மருத்துவ மாணவா்கள் இடம்பெற்றிருந்தனா்.

Advertisement

Updated On : 22 ஜனவரி, 2026 at 12:59 AM

மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சை சுமாா் 10 மணி நேரம் நீடித்தது. அறுவை சிகிச்சையின் போது, மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களும் மாற்றப்பட்டதால், மூளைக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. உடலின் மற்ற நாளங்களிலும் ரத்த ஓட்டம் தடைபட்டு உறுப்பு செயலிழப்பு ஏற்படும் நிலை இருந்தது. அதனால், கவனத்துடனும், துல்லியமான தொழில்நுட்பத்துடனும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் அவா் நலம் பெற்று வருகிறாா். தமிழக அரசு மருத்துவமனைகளில் இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது இதுவே முதல்முறை. தனியாா் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.