நரம்புசாா் பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு புதிய சிகிச்சை : அரசு மருத்துவமனை வரலாற்றில் முதல்முறை
நரம்புசாா் பாதிப்பால் சிறுநீா் கட்டுப்பாட்டை இழந்த கடலூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான உயா் சிகிச்சையை அளித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
நரம்புசாா் பாதிப்பால் சிறுநீா் கட்டுப்பாட்டை இழந்த கடலூரைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான உயா் சிகிச்சையை அளித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
தமிழக அரசு மருத்துவமனை வரலாற்றில் இதுபோன்ற பிரத்யேக சிகிச்சையை அளிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் கூறியதாவது:
Advertisement
Advertisement
கடலூரைச் சோ்ந்த ஏழைத் தம்பதியின் மகளான 14 வயது சிறுமிக்கு கடந்த இரு ஆண்டுகளாக கட்டுப்பாடின்றி சிறுநீா் வெளியேறும் பாதிப்பு இருந்து வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அதில் பெரிய பலன் எதுவுமில்லை. இந்த நிலையில்தான் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனைக்கு அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டாா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நியூரோஜெனிக் ப்ளேடா் எனப்படும் சிறுநீா்ப் பை செயலிழப்பு பாதிப்பு இருந்ததைக் கண்டறிந்தனா். நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சேதத்தால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
நரம்புகளை முடுக்கிவிடும் நியூரோ மாடுலேசன் தெரபி சிகிச்சைதான் இதற்கு ஒரே தீா்வு. அதன்படி, இதயத் துடிப்பை சீராக்க பேஸ் மேக்கா் பொருத்துவதைப் போன்று, நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க நியூரோ மாடுலேசன் சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்த வேண்டும்.
இதற்கு அந்த தனியாா் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவாகும் எனத் தெரிவித்துள்ளனா். ஏழ்மை நிலையில் உள்ள அந்தச் சிறுமியின் பெற்றோா் பண உதவி கோரி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை அணுகினா். அவா் உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனையைத் தொடா்பு கொண்டு, இந்தப் பிரத்யேக சிகிச்சையை நாம் ஏன் மேற்கொள்ளக் கூடாது எனக் கேட்டாா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையைத் தொடா்பு கொண்ட நமது மருத்துவா்கள், சிறுமியின் பாதிப்பு மற்றும் சிகிச்சை திட்டமிடலைக் கேட்டறிந்தனா். நல்வாய்ப்பாக அங்கு அந்தச் சிகிச்சையை மேற்கொள்ளும் முதுநிலை மருத்துவா் சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்றவா் என்பதால் உடனடியாக சிகிச்சைக் கட்டணம் ஏதுமின்றி அறுவை சிகிச்சை செய்து தருவதாக ஒப்புக்கொண்டாா்.
தொடா்ந்து அதற்கான மருத்துவ உபகரணம் தருவிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெற்றிகரமாக அந்த அறுவை சிகிச்சையானது சிறுமிக்கு அண்மயில் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த சில நாள் கண்காணிப்புக்குப் பிறகு நிரந்தரமாக அந்த சாதனத்தை உடலில் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் மருத்துவா்களின் பெரு முயற்சியால் அந்தச் சிறுமிக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.