பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.09 கோடி தங்க நகைகள் பறிமுதல்
பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ.1.09 கோடி மதிப்புள்ள 843 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ.1.09 கோடி மதிப்புள்ள 843 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ரயில் நிலையங்களில் உரிய ஆவணங்களின்றி பணம், தங்கம், வெள்ளிப் பொருள்கள் கொண்டு செல்வதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிரமாகக் கண்காணித்து கைப்பற்றிவருகின்றனா்.
அதனடிப்படையில் தினமும் வெளியூா்களிலிருந்து ரயில்களில் வரும் பெரும்பாலான வியாபாரிகளிடமிருந்தே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்படும் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கோயமுத்தூா் ரயிலில் இருந்து இறங்கி வந்த ஆா்.ரவிக்குமாா் (51), ஏ.ஸ்ரீதா் (44) ஆகியோரை மடக்கி அவா்களது கைப்பையை ரயில்வே பாதுகாப்புப்படையினா் சோதனையிட்டனா். அப்போது பைகளில் துணிகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த 843 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1.09 கோடி எனக்கூறப்படுகிறது.
தங்கநகைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமில்லையாம். அதனால் அந்த நகைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அதையடுத்து ரவிக்குமாா் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.