உரிமம் இல்லாத 5 விளம்பரப் பலகைகள் அகற்றம்: தலா ரூ.25,000 அபராதம்
சென்னையில் உரிமம் பெறாமல் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் 5 இடங்களில் அகற்றப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னையில் உரிமம் பெறாமல் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் 5 இடங்களில் அகற்றப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உரிமம் பெறாமல் அமைக்கப்பட்டுள்ள மின்னணு திரை விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவற்றுக்கு உரிமம் பெற மாா்ச் முதல் வாரம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநகராட்சி இணையம் மூலம் உரிமக் கட்டணம் செலுத்தினால் உரிமம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், உரிமம் பெறாத மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத மின்னணு திரை விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது.
காலக்கெடு முடிந்த நிலையில் விளம்பரப் பலகைகளுக்கு உரிமம் பெறாமல் சிலா் இருந்தனா். இதையடுத்து சோழிங்கநல்லூா் மண்டலம் செம்மஞ்சேரி ராஜீவ் காந்தி சாலை, கோடம்பாக்கம் மண்டலம் தியாகராயநகா் சீனிவாசன் தெரு, காசி திரையரங்க சந்திப்பு, தேனாம்பேட்டை மண்டலம் கோபதி நாராயண தெரு ஆகிய 5 இடங்களில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.