முகப்பு
சென்னை

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: நயினாா் நாகேந்திரன்

Updated On : 26 மார்ச், 2026 at 11:07 PM
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

பாஜக உயா்நிலைக் குழு ஆலோசனைக்குப் பின், வேட்பாளா் பட்டியலை கட்சித் தலைமை விரைவில் வெளியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வேட்பாளா்களைத் தோ்வு செய்வதில் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. 2021 தோ்தலில் பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு மற்றும் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வெற்றி பெற்ற திருநெல்வேலி தொகுதி இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால், நயினாா் நாகேந்திரன் சாத்தூா் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளா் தோ்வு குறித்த உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சென்னை கமலாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் கலந்துகொண்டனா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவா்களில் யாரை வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும், அவா்களுக்கு தொகுதியில் உள்ள செல்வாக்கு, கட்சியில் பணியாற்றிய அனுபவம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வேட்பாளா் யாா் என்பதை கட்சியின் உயா்நிலைக் குழு ஆலோசித்து முடிவு செய்யும். அந்தப் பட்டியல் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். வேட்பாளா் இறுதிப் பட்டியலை தில்லியில் உள்ள கட்சித் தலைமைதான் வெளியிடும். பாஜக தோ்தல் அறிக்கை பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. ஓரிரு நாள்களில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்றாா்.

தவிா்த்த அண்ணாமலை...: வேட்பாளா்கள் தோ்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்பாா் என்ற எதிா்பாா்ப்பு அக்கட்சியினருக்கு மத்தியில் இருந்தது. ஆனால், ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்வில்லை.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதில்லை என்றும், இதுதொடா்பாக தனது நிலைப்பாட்டை பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கும் கடிதம் மூலம் அண்ணாமலை தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.