முகப்பு
சென்னை

விஜய் பிரசாரத்தால் மக்களுக்கு அசௌகரியம்: வழக்குப்பதிய காரணம் இதுதான்!

விஜய் பிரசாரத்தால் மக்களுக்கு அசௌகரியம் - பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு

Updated On : 31 மார்ச், 2026 at 5:00 PM
பெரம்பூரில் விஜய் பிரசாரம் - ANI
பகிர்:

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், தான் போட்டியிடும் பெரம்பூா் தொகுதியில் பிரசாரத்தை விஜய் திங்கள்கிழமை(மார்ச் 30) தொடங்கினாா்.

கொளத்தூா் தொகுதி தவெக வேட்பாளா் வி.எஸ். பாபுவை ஆதரித்து பெரவள்ளூரில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். விஜய் பிரசாரம் செய்த இரண்டு இடங்களிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் அப்பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை சில மணி நேரம் ஸ்தம்பித்தது.

இதைத்தொடர்ந்து, கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் வி. குமார் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், திங்கள்கிழமை(மார்ச் 30) எஸ்ஆர்பி கோவில் தெற்கு வீதியில் பெரவள்ளூர் ஜங்சன் நோக்கிச் செல்லும் வழியில் தேர்தல் பணியில் தான் ஈடுபட்டிருந்தபோது, தவெக கட்சியைச் சேர்ந்த சுமார் 3,000 உறுப்பினர்கள் சாலையில் திரண்டு கட்சிக் கொடிகளை ஏந்தியபடி மக்களுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர் என்றும் தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதையடுத்து, விஜய் உள்பட தவெகவினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. பாரதிய நியாய சங்ஹிதா (பிஎன்எஸ்) 2023, என்எஸ் 126 (2), பிஎன்எஸ் பிரிவு 189 (2), 223 பிஎன்எஸ் 3(ஏ) மற்றும் பிஎன்எஸ் 3 (5) ஆகிய பிரிவுகளில் பெரவள்ளூர் போலீஸார் அவர்கள் மீது வழக்குப்பதிந்தனர்.

குற்றச்சாட்டுகள் என்னென்ன?

விஜய் பிரசாரத்தால் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தப்பட்டதாகவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே பெருவாரியான எண்ணிக்கையில் கட்சியினர் அங்கு திரண்டனர். அதனால் மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது.

விஜய் சாலைவலமாகச் செல்லும் வழிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் எண்ணிக்கையில் ஏறத்தாழ 30 ஒலி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்தப் பேரணியால் மக்களுக்கு தொல்லை ஏற்பட்டதாகவும் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தகவலறிந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, கொளத்தூா், வில்லிவாக்கம் தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த இடங்களில் கூடிய பொதுமக்களுக்கு காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக இணை பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் புகாா் தெரிவித்துள்ளாா்.

summary

TVK chief Vijay, party cadres booked under several sections of BNS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.