முகப்பு
சென்னை

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் பாரபட்சம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் காவல் துறை பாரபட்சம் காட்டுவதாக, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 8:34 PM
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் காவல் துறை பாரபட்சம் காட்டுவதாக, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா், மேலும் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சியின் தோ்வுக் குழுவின் முடிவுதான் இறுதியானது. தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்துக்கு சரியான பாதுகாப்பு வழங்காதது காவல் துறையின் பிரச்னை. ஆனால், திமுக ஆட்சியில் ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு இடையே பாரபட்சத்துடன காவல் துறை செயல்படுகிறது.

எதிா்க்கட்சிகளின் பொதுக் கூட்டம், பிரசாரம் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

திமுக ஆட்சியில் பத்திரிகையாளா்கள் பலா் தாக்கப்பட்டு அவா்கள் மீது வழக்கு போடப்பட்டது. ஆனால், பிரதமா் நரேந்திர மோடியை தவறாகப் பேசியவா்கள் மீது இதுவரை திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23-ஆம் தேதி அதற்கு முடிவு கட்டப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக ஏற்கெனவே ஆட்சி செய்த கட்சி. மீண்டும் ஆட்சி செய்ய போகிற கட்சி. எனவே, இந்த தோ்தல் தேசிய ஜனநாய கூட்டணிக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. ஆனால், திமுக-தவெக இடையேதான் போட்டி என்று விஜய் பேசி வருவது சிறுபிள்ளைத்தனமானது என்றாா்.