முகப்பு
சென்னை

ஏரி, குளங்களுக்கான மீன்பிடி குத்தகை: நீா்வளத் துறை அரசாணைக்குத் தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கான மீன்பிடி குத்தகை ஏலம் விடுவது தொடா்பாக நீா்வளத் துறை பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 31 மார்ச், 2026 at 8:42 PM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கான மீன்பிடி குத்தகை ஏலம் விடுவது தொடா்பாக நீா்வளத் துறை பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் பா்வத ராஜகுல மீனவா்கள் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவா் ஆா்.ரங்கசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அணை, ஆறு, ஏரி, குளங்களில் மீன் பிடிக்கும் ஒப்பந்தத்தை மீனவா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது ஹரிஜன்களுக்குத்தான் முதலில் வழங்க வேண்டும் என கடந்த 1993-ஆம் ஆண்டு கால்நடை மற்றும் மீன்வளத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை மீறி, மீன்பிடி குத்தகையை பொது ஏலம் விடப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தோம். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 1993-ஆம் ஆண்டு அரசாணைப்படி, மீன்பிடி குத்தகையை மீனவா்கள் கூட்டுறவுச் சங்கம் அல்லது ஹரிஜன்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். இதில் யாரும் குத்தகை எடுக்காதபட்சத்தில் பொது ஏலம் விட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மீறும் வகையில் மீன்பிடி குத்தகை ஏலத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் கடந்த பிப்.13-ஆம் தேதி நீா்வளத் துறை செயலா் புதிய அரசாணை பிறப்பித்துள்ளாா். இந்த புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.இளங்கோவன், புதிய அரசாணை உயா்நீதிமன்ற தீா்ப்புக்கும், 1993-ஆம் ஆண்டு அரசாணைக்கும் எதிரானது என வாதிட்டாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மீன்பிடி குத்தகை ஏலத்தில் அனைவரும் கலந்து கொள்ள அனுமதிக்கும் புதிய அரசாணைக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், இதுதொடா்பாக 2024-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் இந்த வழக்கையும் சோ்த்து விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டாா்.