மா.அரங்கநாதன் இலக்கிய விருதுக்கு கி.விட்டல் ராவ், அம்ஷன் குமார் தேர்வு
2026-ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது எழுத்தாளர் கி.விட்டல் ராவ், எழுத்தாளர்-இயக்குநர் அம்ஷன் குமார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது எழுத்தாளர் கி.விட்டல் ராவ், எழுத்தாளர்-இயக்குநர் அம்ஷன் குமார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அவரது நினைவையொட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ஆம் தேதி முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன. கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாகப் பங்களித்துவரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவர்களுடைய ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுடன் தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள கி.விட்டல் ராவ், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து குறுநாவல்கள், பன்னிரண்டு நாவல்கள் மற்றும் ஓவியங்கள், தமிழ், கன்னட, இந்திய உலகத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் என தனது 50 ஆண்டு காலப் படைப்புகள் மூலம் தனித்துவம் கொண்டவர். இவர் இலக்கிய சிந்தனை பரிசு, தில்லி சாகித்திய சம்மான் விருது, கோவை விஜயா பதிப்பக ஜெயகாந்தன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள அம்ஷன் குமார் 50 ஆண்டுகளாக சிறுகதைகள், நவீன கலைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு, திரைப்படக் கட்டுரைகள், ஆவணப்படங்கள், திரைப்படப் பயிற்சி வகுப்புகள் எனத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சர்வதேச திரைப்பட விருது, புதுவை அரசு விருது, நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்க விருது, இலங்கை தேசிய விருது, பாரதி விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தலைமை வகித்து விருதுகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்துகிறார்.