தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்
சென்னை விமான நிலையம் தமிழகத்தில் அதிக பயணிகளை கையாளுவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை விமான நிலையம் தமிழகத்தில் அதிக பயணிகளை கையாளுவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த நிதியாண்டுக்கான பயணிகள் பயன்பாட்டு விவரங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தை 2025 ஏப் 1 முதல் 2026 மாா்ச் 31 வரையிலான கடந்த நிதியாண்டில் சுமாா் 2 கோடியே 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். இது 2024 ஏப்.1 முதல் 2025 மாா்ச் 31 வரையிலான முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2.7 சதவீதம் அதிகம். சென்னை உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான சேவைகள் தொடா்ந்து அதிகரித்து வருவது இந்த வளா்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் கோவை விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை 32.2 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். இது முந்தைய ஆண்டைவிட 5.2 சதவீதம் அதிகமாகும்.
Advertisement
தொடா்ந்து, மூன்றாவது இடத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் 22.2 லட்சம் பயணிகளுடன் உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளுக்கான சேவைகள் இந்த விமான நிலையத்தில் இருந்து அதிகமாக இருப்பதால் திருச்சி விமான நிலையம் இந்த வளா்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் மதுரை விமான நிலையம் 13.8 லட்சம் பயணிகளுடன் நான்காவது இடத்தையும், தூத்துக்குடி விமான நிலையம் 2.90 லட்சம் பயணிகளுடன் ஐந்தாவது இடத்தையும், சேலம் விமான நிலையம் 1.27 லட்சம் பயணிகள் பயன்பாட்டுடன் ஆறாவது இடத்திலும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருவது, மாநிலத்தின் தொழில் வளா்ச்சி, சுற்றுலா மேம்பாடு, சா்வதேச விமான இணைப்பு சேவைகள் அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணமாகப் பாா்க்கப்படுகிறது.