முகப்பு
சென்னை

விபத்தில் சிக்கிய பெண்: அங்கத்தைக் காத்த அரசு மருத்துவா்கள்

சாலை விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்திருந்த பெண்ணின் காலை பல்வேறு கட்ட சிகிச்சைகளை அளித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

Updated On : 12 மே 2026, 12:17 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சாலை விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்திருந்த பெண்ணின் காலை பல்வேறு கட்ட சிகிச்சைகளை அளித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன், கண்காணிப்பாளா் டாக்டா் பாஸ்கா் ஆகியோா் கூறியதாவது: கடந்த மாா்ச் மாதம் 49 வயது பெண் ஒருவா் சென்னையில் நோ்ந்த சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சைக் குழுவினரால் உயிா் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவப் பரிசோதனையில் வலது காலில் தோல் உரிந்தும், தசைகள் பிளவுபட்டு எலும்பின் ஒரு நீண்ட பகுதி வெளியே தெரிந்ததும் காணப்பட்டது. மேலும், இரு கணுக்கால் எலும்பு முறிவும் இருந்தது. அதிகப்படியான ரத்த இழப்பின் காரணமாக அவரது ஹீமோகுளோபின் அளவு 8-ஆக குறைந்தது.

Advertisement

உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு காயத்தில் இருந்த உயிரற்ற திசுக்கள் அகற்றப்பட்டு, கணுக்கால் எலும்புகள் சீராக்கப்பட்டன. பாதம் சேதமடையாமல் இருந்தபோதிலும், கால் எலும்பின் ஒரு நீண்ட பகுதி வெளியே தெரிந்ததால், அதைச் சீரமைக்க வழக்கமான ஒட்டுறுப்பு முறைகள் சாத்தியமாக இல்லை.

இதையடுத்து, செயற்கை தோலைப் பயன்படுத்தி காயத்தை மூடும் நவீன முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பெண் நலமுடன் வீடு திரும்பியுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.