எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் தேர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலைய முனையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், நலத் திட்டங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் புதன்கிழமை காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். முகாமில், விண்ணப்பித்த 4 மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக மூன்று சக்கர மிதிவண்டிகள், மனவளர்ச்சி குன்றிய இளஞ்சிறார் பயிற்சி மைய குழந்தைகள் பயில்வதற்காக ஆவாஸ் மென்பொருள் பொருத்திய டேப் போன்றவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், பேச்சுப் பயிற்சியாளர் பிரபாகரன், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்ணைப்பாளர் சஞ்சீவ்குமார், காஞ்சிபுரம் வட்டாட்சியர் நாகராஜன், ஒன்றிய ஆணையர் நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.