முகப்பு
காஞ்சிபுரம்

மத்திய, மாநில அரசின் 27 திட்டங்கள் ஆய்வு: எம்எல்ஏ, எம்.பி.க்கள் பங்கேற்பு

மத்திய, மாநில அரசின் 27 திட்டங்கள் தொடர்பாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வுக் குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

மத்திய, மாநில அரசின் 27 திட்டங்கள் தொடர்பாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வுக் குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, குழுவின் தலைவரும், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினருமான மரகதம் குமரவேல், இணைத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. ராமச்சந்திரன், செயலர்-ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் தலைமை வகித்தனர். குழு உறுப்பினர்களும், எம்எல்ஏ-க்களுமான எழிலரசன், ஆர்.டி.அரசு, வரலட்சுமி, கருணாநிதி, அரவிந்த்ரமேஷ், கே.பழனி, எஸ்.ஆர்.ராஜா, கே.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வேளாண்மை, சுகாதாரம், கல்வி, சமூக நலம், தேசிய தகவல் மையம் , தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய அரசுத் துறைகளின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜனா, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சமூக நலத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம், எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட 27 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, நிகழாண்டில் 2,69,349 குடும்பத்தினருக்கு ரூ. 231 கோடி கூலித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், கிராம சாலை திட்டத்தில் ரூ. 201 கோடியில் 592 கி.மீ. க்கு சாலைப் பணிகள், ரூ. 64 கோடியில் 36 சாலைப் பணிகள், 9 பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
தேசிய கிராம நகரத் திட்டத்தில், சிங்கப்பெருமாள் கோயில், ஆப்பூர், வெங்கடாபுரம், செட்டிபுண்ணியம், குருவன்மேடு, கொளத்தூர், ரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் நகர்ப்புற வசதிகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்ரூத் திட்டத்தில் பூங்கா பணிகள், புதை வடிகால் பணி உள்ளிட்ட 17 பணிகள் விரைந்து முடிக்கப்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதுபோல், அனைவருக்கும் கல்வி இயக்கம், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தீன தயாள் உபாத்தியா கிராம ஜோதி யோஜனா ஆகிய திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →