காஞ்சிபுரம் காமராஜர் சாலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவீன கழிப்பறை அமைக்க வளைகுடா பகுதி வாழ் தமிழர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இப்பள்ளி மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனை அறிந்த குழந்தைகள் கண்காணிப்பகம் எனும் தொண்டு நிறுவனம், பல்நோக்கு சமூக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நவீன கழிப்பறை கட்டடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்தது.
இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். குழந்தைகள் கண்காணிப்பகம் இயக்குநர் து.ராஜ் முன்னிலை வகித்தார். புதியதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை இந்தியன் வங்கி துணைப் பொதுமேலாளர் பரமராஜ் திறந்து வைத்தார்.
இதுகுறித்து குழந்தைகள் கண்காணிப்பக தொண்டு நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சிலர் சிறுநீர் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, அரசு மகளிர் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டித்தரும் முயற்சியை மேற்கொண்டோம். அதன்படி, தொண்டு நிறுவன உறுப்பினர்கள் சிலர் கலிஃபோர்னியா, சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றனர். அதோடு, அங்கு வளைகுடா தமிழ்மன்றமும் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் உதவியால், ரூ.2.50 லட்சம் செலவில் 20 மாணவிகள் பயன்பெறும் வகையில், நவீன கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது என்றனர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், திரளான மாணவிகள் கலந்துகொண்டனர்.