மோசமான நிலையிலுள்ள தென்னேரி - ஒட்டந்தாங்கல் இடையேயான கிராமச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து தென்னேரி ஊர்பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
வாலாஜாபாத் வட்டம், தென்னேரி ஊராட்சியில் மேட்டுக் காலனி உள்ளது. இப்பகுதியிலிருந்து, ஒட்டந்தாங்கல் வரையிலுள்ள சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.
இதனால், பள்ளி, கோயில், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சிரமப்படுகின்றனர்.
மேலும், இரு சக்கர, கனரக வாகனங்கள், அவசர ஊர்திகள் ஆகியவை செல்லவும் இடையூறாக உள்ளது. அப்பகுதிகளில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே, மக்கள் எளிதில் சென்று வரும் வகையில் சாலையைச் சீரமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.