3 பேரைக் கொன்ற சிஐஎஸ்எஃப் வீரருக்கு மூன்று ஆயுள் தண்டனை : செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு
கல்பாக்கம் அருகில் 3 பேரை சுட்டுக் கொலை செய்த வழக்கு மற்றும் 2 பேரைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கல்பாக்கம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தலைமைக் காவலருக்கு
கல்பாக்கம் அருகில் 3 பேரை சுட்டுக் கொலை செய்த வழக்கு மற்றும் 2 பேரைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கல்பாக்கம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தலைமைக் காவலருக்கு மூன்று ஆயுள் தண்டனைகளையும் ரூ. 18 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விஜய்பிரதாப் சிங் (42), கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராக கடந்த 2014இல் பணிபுரிந்து வந்தார்.
அவர் அதே ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மோகன் சிங்(45) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதாப் சிங்(50), காஷ்மீரைச் சேர்ந்த கோவர்தன் பிரசாத்(42), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன்(50), மதுரை சுப்புராஜ்(50) ஆகியோர் மீது தோட்டா பாய்ந்தது.
இந்தச் சம்பவத்தில் மோகன்சிங், கணேசன், சுப்புராஜ் ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவர்தன் பிரசாத், பிரதாப் சிங் ஆகியோர் காயமடைந்தனர்.
இவ்வழக்கில் விஜய் பிரதாப் சிங்கை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதனையடுத்து, அவர் மீது செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் வெங்கடேசன்ஆஜராகி வாதாடி வந்தார்.
வழக்கு முடிவடைந்த நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி ராமநாதன் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
கொலைக் குற்றம், கொலை முயற்சி ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. கொலை செய்த குற்றத்துக்காக 3 ஆயுள் தண்டனைகள், ரூ.15 ஆயிரம் அபராதம், 2 பேரைக் கொலை செய்ய முயற்சி செய்ததற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் ஆகியவற்றை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.