முகப்பு
காஞ்சிபுரம்

ஊரக வளர்ச்சித் துறையினர் சாலை மறியல்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறையினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 10 ஜூலை, 2018 at 4:10 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறையினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதியிலிருந்து மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமையும், 5-ஆவது நாளான திங்கள்கிழமையும் இப்போராட்டம் நீடித்தது. இதன் ஒருபகுதியாக ஆட்சியர் அலுவலகம் அருகேவுள்ள காவலான் கேட் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் திரளானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, மாவட்ட நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 
தொடர்ந்து, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, அப்பகுதியில் திரளான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையொட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள், அனைத்து வட்டங்களில் உள்ள ஊராட்சி செயலர் அலுவலகத்தினர் உள்ளிட்ட பெரும்பாலானோர் பணிக்குத் திரும்பாததால் ஊரக வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது பணிக்கு வரும் அலுவலர்களைக் கொண்டு ஊரக வளர்ச்சித்துறை பணிகளை மேற்கொள்வதாக அத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.