பேருந்து மோதி ஒருவர் சாவு
அச்சிறுப்பாக்கம் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த தனியார் பேருந்தை சரிசெய்து கொண்டிருந்த ஒருவர், மற்றொரு பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
அச்சிறுப்பாக்கம் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த தனியார் பேருந்தை சரிசெய்து கொண்டிருந்த ஒருவர், மற்றொரு பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
சேலத்தில் இருந்து சென்னை நோக்கி தனியார் டிராவல்ஸ் பேருந்து திண்டிவனம் வழியாக திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தது. அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சமத்துவபுரம் அருகில் வந்தபோது அந்தப் பேருந்து பழுதாகியது.
இதனை சரிசெய்ய பின்னால் வந்த தனியார் பேருந்தில் வந்த மல்லியக்கரை கிராமத்தைச் சேர்ந்த வையாபுரியின் மகன் சிவக்குமார் (36) என்பவர் முன்வந்தார். அவர் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து, அங்கு நின்றிருந்த சிவக்குமார், கரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த லெனின்குமார் (32) உள்ளிட்டோர் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே சிவகுமார் இறந்தார். படுகாயமடைந்த லெனின்குமார் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இவ்விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.