செங்கல்பட்டு அருகே இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றி வந்த இளைஞர் அவரது தந்தையுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கானிக் பாஷா. அவரது மகன் முபாரக் (35) திருமணமானவர். அவர் செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உணவு விடுதி நடத்தி வருகிறார்.
அவர் மாமல்லபுரம் பகுதியில் ஒரு உணவு விடுதியில் வேலை செய்து வந்த சென்னையைச் சேர்ந்த 27 வயது பெண்ணைச் சந்தித்தார்.
தனது உணவு விடுதியில் வேலை செய்யுமாறு கூறி அழைத்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணிடம் தகாத உறவு கொண்டிருந்தார்.
இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் வற்புறுத்தியபோது அதை மறுத்த முபாரக் அந்தப் பெண்ணிடம் இருந்து விலகினார்.
இதனால் ஏமாற்றமடைந்த அந்தப் பெண் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் இளம் பெண்ணை ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்து, முபாரக்கையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தையையும் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் செங்கல்பட்டு மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.