தாம்பரத்தை அடுத்த எருமையூரில் கடந்த சனிக்கிழமை ஓர் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை சோமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த பழண்டந்தலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). அவர் மணல், செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்து வந்தார். இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த நவரசம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் விஜய் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், விஜய் கடந்த சனிக்கிழமை மதியம் தாம்பரம் அருகே எருமையூரில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக சோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இக்கொலை வழக்கு தொடர்பாக எருமையூர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(25), பம்மல் பகுதியைச் சேர்ந்த சத்யா(24), திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(25), அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த நிர்மல்(25) ஆகியோரை சோமங்கலம் போலீஸார் கைது செய்து விசாரித்து
வருகின்றனர்.