காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமையில் 14 வார்டுகளுக்கான குறைதீர்முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட ஒலிமுகமதுபேட்டை, சர்வதீர்த்தக் குளம், பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட 14 வார்டுகளில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ எழிலரசன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார். அதன்படி, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதிகள், சாலை பழுதுநீக்கல், நகர் தூய்மை, கொசு ஒழிப்பு, மின் கம்பம் அமைத்தல், குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில், பெருநகராட்சி ஆணையர் சர்தார், பொறியாளர் மகேந்திரன், நகர் நல அலுவலர் முத்து, முதியோர் உதவித்தொகை வட்டாட்சியர் உமா, வட்டாட்சியர் காஞ்சனாமாலா, தனி வட்டாட்சியர் (வழங்கல்) கோ.சித்ரா, காஞ்சிபுரம் திமுக நகர செயலர் சன் பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்ட மாவட்ட, வட்ட திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.