மத்திய சுற்றுலாத்துறை மற்றும் எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டன.
அதன்படி, எஸ்ஆர்எம் கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா வழிகாட்டிகள், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள், சுற்றுலாத் துறை பணியாளர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் ஒருங்கிணைந்து கடற்கரைப் பகுதியில் ஆங்காங்கே கிடந்த பாலிதீன் குப்பைகள், செடி கொடிகளை உள்ளிட்டவற்றை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், இப்பணியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கடற்கரைப் பகுதிகளையும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் எவ்வாறெல்லாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் நிகழ்த்திக் காட்டினர்.
நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத் துறை இயக்குநர் தனியரசு, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக் கழக நட்சத்திர விடுதி மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட உள்ளூர் மக்கள் மற்றும் மாமல்லபுரத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.