வேடபாளையம் பகுதியில் ரூ.1.75 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த வந்தவாசி சாலையில் வேடபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு லோடு ஆட்டோ அச்சாலையில் நிற்காமல் வேகமாக சென்றது. இந்த வாகனத்தை விரட்டிப் பிடித்த போலீஸார், அதில் சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில், தடை செய்யப்பட்ட சுமார் ரூ.1.75 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, குட்கா பொருள்கள், அந்த லோடு ஆட்டோ ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். குட்கா பொருள்களின் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநர் ரவி (32) என்பவரை அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.