மதுராந்தகம் அருகே மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிகணினிகளை வழங்காததைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் கடந்த 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் 200 பேருக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதற்கு பள்ளி நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், மாணவர்களும் சேர்ந்து பள்ளி வளாகத்தின் முன்பு விலையில்லா மடிகணினி வழங்கக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் தமிழ்பாரதி முன்னிலை வகித்தார். தகவலறிந்து பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
வரும் 3 மாதங்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.