படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கரசங்கால் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் புஷ்பராஜ் (19). இவரது உறவினர் ரவிச்சந்திரன் (58). இவர்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை கரசங்கால் பகுதியில் நடந்து வந்தபோது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், நைனி ஆகியோர் செங்கற்களால் இவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த புஷ்பராஜ் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனை முடிந்து புஷ்பராஜின் உடல் செவ்வாய்க்கிழமை இரவு அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புஷ்பராஜின் நண்பர்களுக்கும், செந்தில், நைனி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், மலாலிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவப்பிரகாசம் (29) அரிவாளால் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த காயம் அடைந்த புஷ்பராஜின் தந்தை மதன், மணிமங்கலம் ராஜேஷ், படப்பை ஏழுமலை ஆகியோர் தாம்பரம், படப்பை பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.